Showing posts with label நாக கவசம் - NAGA KAVASAM. Show all posts
Showing posts with label நாக கவசம் - NAGA KAVASAM. Show all posts

Tuesday, July 26, 2011

நாக கவசம் - NAGA KAVASAM

பல பேர் சோதிடர்களிடம் போவார்கள்.  உங்களுக்கு நாகதோசம் உள்ளது.  எனவே நீங்கள் காளத்திக்குப் போங்கள் என்பார் ஒருவர்.  மற்றொருவர் வேறு ஊரைச் சொல்வார்.  நாகதோசம் உள்ளவர்கள் பயன்பெற நாகக் கவசம் இங்கே தரப்பட்டுள்ளது.

நாக தெய்வக் கவசத்தைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.  மனதில் நாகராசன்-நாகராணி ஆகியோரை நினைத்துக் கொள்ள வேண்டும். 

நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே.

வணங்கும் பக்தருக்கு அருளுகிற வளம் தரும் நாகராசாவே-நாகராணியே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய்
தெற்கினிலே சுணக்கமின்றிச் சுகந்தருவாய்
சோதி மறையும் மேற்கினிலே மணக்க வந்து காப்பாயே
வடக்கிலும் காத்து வளம் தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில்
மேல் கீழ் ஆகாயம் நீயே
செல்வம்தனைத் தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய்
நெற்றியோடு வாயைப் புருவ நடுவினையும்
வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா பற்கள்
மின்னும் நாகராசாவே-நாகராணியே விரைந்து காப்பாய்
முகம் கழுத்தும் இன்னல் தீர்க்கும் எழில்கோவே இதமாய்க் காப்பாய்
தோள், கைகள் மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இல்லையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் நீ காப்பாய்
நீள்தொடை முழந்தாள் ஆடுசதைமலையே
கால்நகம் கணைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாயே

எங்கள் உரோமம் நரம்பினையும்
எலும்பு தசைகளை இரத்தம்
திங்கள் இரவு உள்ளவரை தினமும் காப்பாய்
இரவு பகல் மங்கும் நேரம் மலர்நேரம் மருளும் நேரம் மகிழ்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே அரவத்தேவே காப்பாயே

எட்டுத்  திசையிலும் காப்பாயே
எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள்
தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப்போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே
விடங்கள் ஏறாது அருள்வாயே

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகருக்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்க்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணியதெல்லாம் எமக்கு ஈந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய பக்தன் இவன் செஞ்சொல் கவசம்
தினம் சொன்னால் நல்ல புத்திரப்பேறு தரும்
நாகதோசம் நீங்கிவிடும்,
இல்லற சுகமும் இயைந்து வரும்
எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன எல்லாம் கைகூம்
வாழ்வில் வளமும் பெருகிடுமே